Skip to main content

GD NAIDU

பழங்கால கோவையை தத்ரூபமாக உருவாக்கிய ‘ஜி.டி.என்.’… பிரமிக்க வைக்கும் படப்பிடிப்பு தளங்கள்!
பழங்கால கோவையை தத்ரூபமாக உருவாக்கிய ‘ஜி.டி.என்.’... பிரமிக்க வைக்கும் படப்பிடிப்பு தளங்கள்!
கோவை,
20-ம் நூற்றாண்டின் தொடக்க கால கோவையை ஜி.டி.என். திரைப்படத்தில் அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளனர். படத்தின் பிரமாண்டத்தைக் கண்டு ரசிகர்களே வியந்து போய் உள்ளனர்.

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம் ஆகஸ்டு 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், பத்திரிகையாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கான சிறப்புத் திரையிடல் ஆகஸ்டு 4-ந் தேதி நடைபெற்றது.
திரையிடலுக்குப் பிறகு நடைபெற்ற கலந்துரையாடலில், படத்தின் கதை அல்லது நடிகர்களின் நடிப்பை விட, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது படத்தின் பிரமாண்டமான தயாரிப்பு மற்றும் அந்தக் காலகட்ட கோவையை மீண்டும் உருவாக்கிய விதம்தான்.

ஆரம்பத்தில், 20-ம் நூற்றாண்டின் தொடக்க மற்றும் நடுப்பகுதி காலகட்டத்தில் இருந்த கோவையின் வாழ்க்கை முறையையும், தெருக்களையும், கட்டிடங்களையும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நம்பகத்தன்மையுடன் மீண்டும் உருவாக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்துள்ளது.
ஆனால், படம் முடிந்ததும் அந்த சந்தேகம் ஆச்சரியமாக மாறியதாக திரையிடலில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர்.

கிராமத்தையே காலி செய்துவிட்டார்களா?

படப்பிடிப்பின் முதல் நாளில் நடந்த ஒரு சம்பவத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பகிர்ந்துள்ளார். படத்தில் இளம் ஜி.டி.நாயுடுவாக நடித்துள்ள அருணாசலம், படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோது தான் எங்கு இருக்கிறோம் என்பதை உடனடியாக புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததாக இயக்குநர் கூறினார்.
இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறும்போது, “நாங்கள் ஒரு கிராமத்தையே காலி செய்துவிட்டு, அது இருந்த நிலையிலேயே அங்கே படப்பிடிப்பு நடத்துகிறோம் என்று அருணாசலம் நினைத்துவிட்டார். அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு விஷயமும் கவனமாக உருவாக்கப்பட்டிருந்தது” என்றார்.
இது பழைய காலத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு படப்பிடிப்பு தளம் மட்டுமல்ல. உண்மையிலேயே பழைய காலத்துக்குள் சென்றுவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தத்ரூபம்

இந்த பிரம்மாண்டத்துக்கு கலை இயக்குநர் சிரில் மற்றும் அவரது குழுவினரின் பங்களிப்பு முக்கியமானது என இயக்குநர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
பழைய காலத்து தெருக்கள் மற்றும் கடைகள் மட்டுமின்றி, ஜி.டி.நாயுடு உருவாக்கிய கண்டுபிடிப்புகள், அவர் பயன்படுத்திய வாகனங்கள் உள்ளிட்டவையும் மிகுந்த கவனத்துடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.
“அவர் உருவாக்கிய ஒவ்வொரு கண்டுபிடிப்பும், அவர் பயன்படுத்திய ஒவ்வொரு வாகனமும் சிரில் தலைமையிலான குழுவால் துல்லியமாக மீண்டும் உருவாக்கப்பட்டது” என்று கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவிலும் தனி கவனம்

படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த், பழைய காலத்தை திரையில் நம்பகத்தன்மையுடன் காட்டுவதில், ஒளியமைப்பின் பங்கு குறித்து தெரிவித்துள்ளார்.
ஒரு காலகட்ட திரைப்படத்தில் ஒளியமைப்பு சரியாக அமையவில்லை என்றால், மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்ட படப்பிடிப்பு தளம்கூட செயற்கையாகத் தோன்றிவிடும். எனவே ஒளியமைப்பு மற்றும் எக்ஸ்போஷர் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
பாரம்பரிய 'விஷுவல் எபெக்ட்ஸ்' தொழில்நுட்பத்துடன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளையும் இணைத்து பணியாற்றியதாக அரவிந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யாமல் தேவையான காட்சியமைப்பை உருவாக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கோவையிலேயே முழு படப்பிடிப்பு

படத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் பெரும்பாலான முக்கிய காட்சிகள் கோவையிலேயே படமாக்கப்பட்டுள்ளன. ஜி.டி.நாயுடு தனது தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த உண்மையான இடங்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. வேறு இடங்களை கோவையாக மாற்றிக் காட்டுவதற்கு பதிலாக, உண்மையான இடங்களையே பயன்படுத்த படக்குழு முயற்சி செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஜி.டி.நாயுடு பயன்படுத்திய சில பொருட்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சில பழைய கார்கள் அவரது குடும்பத்தினரால் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை தற்போது கூட இயங்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்காக அந்த வாகனங்களை ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினர் படக்குழுவிடம் வழங்கினர்.
அந்த பழமையான கார்களுடன், ஜி.டி.நாயுடுவுடன் தொடர்புடையதாக பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்த பேருந்துகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஹிட்லர் காலத்து ஜெர்மனியையும் கண்முன் நிறுத்திய காட்சிகள்

ஜி.டி.நாயுடு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களிலும் சில காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அதில், ஹிட்லர் ஆட்சி கால ஜெர்மனியில் நடைபெற்ற அணிவகுப்பு தொடர்பான ஒரு காட்சி மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் மாதவன் நடிக்கும் ஜி.டி.நாயுடு, அங்கு நடைபெற்ற சம்பவங்களுக்கு மிக அருகில் நின்றிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் 'விஷுவல் எபெக்ட்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குநர் கிருஷ்ணகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்சிகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள் கவனமாக பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். இருப்பினும், இறுதிக் காட்சியில் அது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கதையின் ஒரு பகுதியாக மாறிய பிரமாண்டம்

உண்மையான படப்பிடிப்பு தளங்கள், பழமையான வாகனங்கள், தத்ரூபமான கலை இயக்கம், நவீன 'விஷுவல் எபெக்ட்ஸ்' மற்றும் தொழில்நுட்பம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ‘ஜி.டி.என்.’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் பின்னணியாக மட்டும் இந்த பிரமாண்டம் பயன்படுத்தப்படவில்லை. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையையும், அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் பார்வையாளர்கள் உணரச் செய்வதில் இந்த முயற்சிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

ஆகஸ்டு 4-ந் தேதி நடைபெற்ற சிறப்புத் திரையிடலுக்குப் பிறகு, படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டியுள்ள நிலையில், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் திரையில் படக்குழு கொண்டு வந்துள்ளது என்பதை அறிய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ஜி.டி.என்.’ திரைப்படம் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. வர்கீஸ் மோலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்டு 7-ந் தேதி (இன்று) தமிழ்நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.