Skip to main content

GD NAIDU

கடும் போட்டிக்கு மத்தியிலும் முன்னேறும் ஜி.டி.என்.
கடும் போட்டிக்கு மத்தியிலும் முன்னேறும் ஜி.டி.என்.
சென்னை,
ஜனநாயகன், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே, டிசி என முன்னணி திரைப்படங்கள் களமிறங்கிய அதே வாரத்தில் வெளியான ஜி.டி.என்., ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று கடும் போட்டிக்கு மத்தியிலும் முன்னேறி வருகிறது.

ரசிகர்கள் பாராட்டு மழை

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜி.டி.என், கடந்த 7-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதே நேரத்தில், முதல்-அமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் 2-வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. மேலும், ஹாலிவுட்டின் பிரமாண்ட திரைப்படமான ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படமும் அதிக திரையங்குகளில் வெளியானது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசியும், ஜி.டி.என். வெளியான அதேநாளில் திரைக்கு வந்தது.
இப்படி, கடும் போட்டிக்கு மத்தியில், ஜி.டி.என். திரைப்படம் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளிலேயே வெளியானது. இதனால், முன்னணி நட்சத்திரப் படங்களுக்கு கிடைக்கும் பிரமாண்டமான தொடக்க வசூல் இப்படத்துக்கு கிடைக்கவில்லை. ஆனால், ரசிகர்களின் பாராட்டுகள் மூலம் படத்துக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வினாடி-வினா போட்டிகள்

ஜி.டி.என். படத்துக்கான வரவேற்பு, படம் வெளியான பிறகுதான் தொடங்கியது என்று கூற முடியாது. திரைப்படத்துக்கான விளம்பரப் பணிகள், வெளியீட்டுக்கு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை இணைக்கும் வகையில் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தினசரி கேள்விகள் இடம்பெற்றன.

திரைக்கு வரும் முன்பே எதிர்பார்ப்பு

மேலும், ‘டிரைலரை பரிமாறுங்கள்’ என்ற போட்டி மூலம் படத்தின் டிரெய்லர் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் நேர்காணல்கள், தினத்தந்தி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான தொடர் செய்திகள் என பல்வேறு வழிகளில் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை மக்களிடையே தொடர்ந்து பேசப்பட்டது.
மற்ற திரைப்படங்கள் பிரமாண்டம் மற்றும் நட்சத்திரங்களை முன்னிறுத்திய நிலையில், ஜி.டி.என். படத்தின் விளம்பரத்தில் ஜி.டி.நாயுடு என்ற மனிதரின் வாழ்க்கையே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. இதன் மூலம் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பலருக்கு ஜி.டி.நாயுடு குறித்த அறிமுகம் ஏற்பட்டிருந்தது. இதுவே படம் வெளியான பிறகு நேர்மறையான விமர்சனங்கள் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அரங்கம் நிறைந்த காட்சிகள்

படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்திலும் இந்த மாற்றத்தை பார்க்க முடிந்தது. வெள்ளிக்கிழமை காலை மற்றும் தொடக்க பிற்பகல் காட்சிகளில் ரசிகர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால், பிற்பகல் காட்சிகள் முடிந்ததும் படத்தை பார்த்தவர்கள் தெரிவித்த கருத்துகள் மூலம் படம் குறித்த தகவல் வேகமாக பரவத் தொடங்கியது.
வசூல் நிலவரங்களை கண்காணிக்கும் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமையை விட சனிக்கிழமை வசூல் சுமார் 75 சதவீதம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மேலும் 32 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக கூறப்படுகிறது.
முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூலை குவிப்பதற்கு பதிலாக, அடுத்தடுத்த நாட்களில் பார்வையாளர்களை தானாக ஈர்த்துக்கொண்டிருப்பது ஜி.டி.என். படத்தின் தனித்துவமான வரவேற்பாக பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை முதலே பல திரையரங்குகளில் படத்தின் காட்சிகள் அரங்கம் நிறைந்த நிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கோவையில் நல்ல வரவேற்பு

வார இறுதி நாட்கள் முடிந்த பின்னரும் படத்துக்கான வரவேற்பு குறையவில்லை. திங்கட்கிழமை சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட திரைகளில் ஜி.டி.என். காட்சிகள் கிட்டத்தட்ட முழு இருக்கைகளுடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி திரைப்படங்கள் பல வெளியாகியுள்ள சூழலில், 4-வது நாளிலும் இந்த அளவுக்கு திரையரங்குகளில் பார்வையாளர்கள் திரண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
கோவையிலும் ஜி.டி.என். திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி.டி.நாயுடுவை தங்களது மண்ணின் மகனாக பார்க்கும் கோவை மக்கள், அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாகியிருப்பதை பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களை சந்தித்த படக்குழுவினர்

கோவையைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கின் பேரனாக இருந்து, பின்னர் பல்வேறு கண்டுபிடிப்புகள் மூலம் ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் அளவுக்கு உயர்ந்த ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை திரையில் சொல்லப்பட்டிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
படக்குழுவினர் இந்த வாரம் பல்வேறு திரையரங்குகளுக்கு நேரில் சென்றபோது, ரசிகர்கள் அவர்களை சந்தித்து படத்துக்காக நன்றி தெரிவித்துள்ளனர். திரைப்படம் வழங்கிய பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்காகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வெற்றிக்கான அளவுகோல் எது?

குறிப்பாக குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த தலைமுறையினர் குறிப்பாக இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
3-ம் வகுப்பிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திய ஜி.டி.நாயுடு, பின்னர் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கி இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களித்தது, கல்வித் தகுதி மட்டுமே வெற்றிக்கான அளவுகோல் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

படத்துக்கு எத்தனை மதிப்பெண்?

'ஜென்சி' மற்றும் 'ஜென்சி ஆல்பா' தலைமுறையினரிடமும் இந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களால் ஏற்படும் கவனச் சிதறல்களுக்கு மத்தியில், ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்துவது, ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது மற்றும் அந்த ஆர்வத்தை படைப்பாற்றலாக மாற்றுவது போன்ற கருத்துகளை ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்த வரவேற்புக்கு விமர்சகர்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, ஜி.டி.என். படத்துக்கு 5-க்கு 4 மதிப்பெண்கள் வழங்கி, இது சிறப்பான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை மிகவும் சுவாரசியமாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.

படத்தின் முக்கிய பலம்

ஆரம்பகட்ட விமர்சனங்களில் நடிகர் மாதவனின் நடிப்பு மற்றும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை நேர்மையாக பதிவு செய்திருப்பது படத்தின் முக்கிய பலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்புடன் ஒப்பிடும்போது வசூல் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை என்பதற்கு திரைகளின் எண்ணிக்கையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடும் போட்டி நிறைந்த வாரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரைகளே கிடைத்துள்ள நிலையில், சனிக்கிழமை முதல் தொடர்ந்து பல காட்சிகள் அரங்கம் நிறைந்து வருவது, படத்துக்கான ஆதரவு பெருகிவருவதாக படக்குழுவினர் கருதுகின்றனர்.
இந்த வரவேற்பு தொடர்ந்து நீடித்தால், வரும் நாட்களில் ஜி.டி.என். திரைப்படத்துக்கு கூடுதல் திரைகள் கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.